HPV தடுப்பூசியை வழங்குவதன் மூலம், உங்கள் மகளை கருப்பை-வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்.
உங்கள் மகளை கருப்பை-வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்.
கருப்பை-வாய் புற்றுநோயைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால்?
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் மூலம், HPV வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக, HPV தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த HPV தடுப்பூசி, பாடசாலை தடுப்பூசித் திட்டத்தின் கீழ், தரம் 6 இல் பயிலும் பெண் பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது. முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு அடுத்த டோஸைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, உங்கள் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகம் மூலமாகவோ, தனியார் மருத்துவ சேவைகள் மூலமாகவோ இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
HPV தடுப்பூசி தரம் 6 இல் வழங்கப்படுவது ஏன்?
பாலியல் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னரே HPV தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குக் காரணம், தடுப்பூசி மூலம் முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டுமாயின், HPV வைரஸ் உடலுக்குள் நுழைந்து புற்றுநோயை உண்டாக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்பே இத்தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதால் ஆகும்.
எனவே, இத்தடுப்பூசி தரம் 6 இல் வழங்கப்பட்டாலும், இதிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு ஒரு பெண் பிள்ளையின் எதிர்கால வாழ்நாள் முழுவதற்கும் முக்கியமானதாக அமைகிறது.
இத்தடுப்பூசியைக் கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?
கருப்பை-வாய் புற்றுநோய் என்பது இலங்கையில் பெண்களிடையே மிகவும் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும்.
இதனைத் தடுத்துக் கொள்வதற்கான மிக எளிதான வழியான HPV தடுப்பூசியை உங்கள் மகளுக்கு வழங்கி, அவரை கருப்பை-வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பது, பெற்றோராகிய உங்களின் தவிர்க்க முடியாத ஒரு பொறுப்பாகும்.

